search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    குலசேகரம் அருகே மதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை

    குலசேகரம் அருகே மதுபோதை தகராறில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவட்டார்:

    குலசேகரம் அலெக்சாண்டர் புரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36) கூலி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், முருகன் ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் 3 பேரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது.

    கடந்த 6-ந்தேதி இவர்கள் 3 பேரும் தும்பக்கோடு பகுதியில் மது அருந்தினார்கள். அப்போது மதுபோதையில் விஜயகுமாருக்கும் அவரது நண்பர்களான ராஜேஷ், முருகனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் விஜயகுமாரை, ராஜேசும், முருகனும் தாக்கி உள்ளனர்.

    மேலும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து அவரை கீழே தள்ளி அடித்து, மிதித்து உள்ளனர். இதில் காயம் அடைந்த விஜய குமார் கீழே விழுந்ததும் நண்பர்கள் 2 பேரும் பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    விஜயகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இன்று காலை பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதுபற்றிய தகவல் குலசேகரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக விஜயகுமாரின் உறவினர் சரோஜா என்பவர் போலீசில் புகார் செய்திருந்தார்.

    அதன் பேரில் குலசேகரம் போலீசார் அடிதடி வழக்குபதிவு செய்திருந்தனர். தற்போது விஜயகுமார் இறந்துவிட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ், முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொலையுண்ட விஜயகுமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதனால் அவரது உறவினர்கள் அங்கு சோகத்துடன் திரண்டு உள்ளனர்.

    Next Story
    ×