search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பரம்பாக்கம் ஏரி
    X
    செம்பரம்பாக்கம் ஏரி

    செம்பரம்பாக்கம் குடிநீரில் நச்சுத்தன்மை இல்லை - குடிநீர் வாரியம் தகவல்

    செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை இல்லை என தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    பூந்தமல்லி:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.

    இதன் மொத்த பரப்பளவு 6 ஆயிரத்து 300 ஏக்கர். இது ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுகோட்டை வரை பரந்துவிரிந்து கிடக்கிறது. ஏரியில் 3645 மில்லியன் கனஅடி சேமித்து வைக்கலாம்.

    தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக வறண்டு கிடந்த செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இப்போது ஏரியில் 1154 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுகோட்டை, கீவலூர், காட்டரம்பாக்கம் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து சில கம்பெனிகள் வெளியேற்றும் சுத்திகரிக்கப்படாத நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுநீர் செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து வந்தது.

    இதனால் ஏரியில் தண்ணீர் மாசு அடைந்து இருப்பதாகவும், தண்ணீர் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை மாதிரி எடுத்து பரிசோதனைக்காக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆய்வின் முடிவில் அந்த தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயோ கெமிக்கல் ஆக்சிஜன் அளவு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவலை குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இருங்காட்டுகோட்டை சிப்காட் பகுதியில் உள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் செம்பரம்பாக்கம் ஏரியில் விடுவது ஆய்வில் தெரியவந்தது. அந்த தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்திய போது ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி கிராம் பயோகெமிக்கல் ஆக்சிஜன் மட்டுமே இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை. இதை குடிநீருக்கு பயன்படுத்தலாம்.

    இதேபோல் புழல் ஏரி தண்ணீரும் ஆய்வு செய்யப்படும்‘ என்றார்.
    Next Story
    ×