
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி விடுதலை தாமதம், பரோல் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கருணை கொலை செய்யக்கோரி பிரதமருக்கு ஒரு பக்க மனுவை எழுதி, சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆண்டாளிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடுத்து விட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நளினி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.