search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரும்புகள் சாய்ந்து கிடக்கும் காட்சி.
    X
    கரும்புகள் சாய்ந்து கிடக்கும் காட்சி.

    காற்றுடன் மழை- திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்புகள் சாய்ந்தன

    காற்றுடன் மழை பெய்ததால் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்புகள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 45 நாட்கள் உள்ளன. பொங்கல் பண்டிகை என்றால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சுவைத்து மகிழ்வது கரும்பு ஆகும். அதுவும் காவிரி கரையோரம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளையும் பொங்கல் கரும்பு என்றால் அதற்கென உள்ள சுவைக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

    சித்திரை பட்டத்தில் பாரம்பரியமான முறையில் பயிர் செய்யப்பட்டுள்ள பொங்கல் கரும்புகள் தற்போது நல்ல நிலையில் வளர்ந்து உள்ளன.

    கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக திருக்காட்டுப்பள்ளி நடுப்படுகை பகுதியில் பல்வேறு வயல்களில் பொங்கல் கரும்புகள் சாய்ந்து விழுந்தன.

    சாய்ந்த கரும்புகளை விவசாயிகள் கூடுதல் ஆட்களை கொண்டு நிமிர்த்தி அருகில் மற்றொரு மூங்கில் கொண்டு கட்டி வைத்தனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவானது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதில் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள சிவந்திதிடல், நடுப்படுகை, படுகை உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கரும்புகள் சாய்ந்து விழுந்தன. சாய்ந்த கரும்புகளை மீண்டும் நிமிர்த்தி கட்டி வைக்க இயலாத நிலையில் வயலில் முழுவதும் கரும்பு சாய்ந்துள்ளன. விற்பனைக்காக இன்னும் ஒரிரு வாரங்கள் உள்ள நிலையில் கரும்பு சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கரும்புக்கு இன்சுரன்ஸ் கட்டாத நிலையில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வருவாய்த்துறை அதிகாரிகள் சாய்ந்து விழுந்த கரும்புகளை பார்வையிட்டு இழப்பீடு கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×