search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஆலங்குளம் அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை- பேரன் ஆத்திரம்

    ஆலங்குளம் அருகே மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை அண்ணாமலைபுதூரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி பாக்கியம்(வயது 85). இவர்களுக்கு போஸ் மற்றும் நாகராஜன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகன் போசுக்கு குழந்தைகள் இல்லை. இளைய மகன் நாகராஜனுக்கு, பாலமுருகன் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் வேலுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக இறந்துவிட்டார். இதனால் பாக்கியம் தனது மூத்த மகன் போஸ் வீட்டில் வசித்து வந்தார். பாலமுருகனுக்கு திருமணமாகி தேன்மொழி என்ற மனைவியும், நவீன் என்ற 5 வயது மகனும் உள்ளனர். பாலமுருகன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் பாலமுருகனின் மனைவி அவரிடம் சண்டை போட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார். பாலமுருகன் தனது பாட்டி பாக்கியத்திடம் அடிக்கடி குடிப்பதற்கு பணம் வாங்கி செல்வார். முதலில் பாக்கியம் பணம் தர மறுத்தாலும், பின்னர் ஒரே பேரன் என்பதால் அறிவுரை கூறி பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலையும் வழக்கம்போல் பாலமுருகன் தனது பெரியப்பா போஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பாக்கியம் மட்டும் தனியாக இருந்துள்ளார். உடனே அவரிடம் பாலமுருகன் குடிக்க பணம் கேட்டுள்ளார்.

    அப்போது பாக்கியம் குடிக்க கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் பாலமுருகன் அதனை கேட்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றவே பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாக்கியத்தின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பாக்கியம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனே அங்கு திரண்டதால் பாலமுருகன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    உடனே அவர்கள் ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாக்கியத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய பாலமுருகன் மீது வழக்குப்பதிந்து செய்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×