search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
    X
    வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

    திண்டுக்கல்லில் முன் விரோதத்தில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

    திண்டுக்கல்லில் இன்று வியாபாரியை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி எம்.டி.எஸ். நகரைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 50). இவர் உழவர் சந்தை அருகே ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இன்று காலை தனது கடையில் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

    திடீரென அவர்கள் முத்தையாவை கீழே தள்ளி விட்டு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். உயிருக்கு பயந்து முத்தையா சாலையில் ஓடினார். இருந்தபோதும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று தாக்கியது. இதை பார்த்ததும் உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை பார்த்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டனர். உடனடியாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முத்தையாவை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக முத்தையாவை அந்த கும்பல் வெட்டிக் கொல்ல வந்தது தெரிய வந்துள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×