search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்சர் பாஷா
    X
    அன்சர் பாஷா

    கொளத்தூரில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - கள்ளக்காதலியின் மகன் வெறிச்செயல்

    கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொளத்தூர்:

    கொளத்தூரை அடுத்த விநாயகபுரத்தில் வசித்து வந்தவர் அன்சர் பாஷா (31). ஆட்டோ டிரைவர் நேற்று இரவு 11 மணியளவில் அவர் கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பு அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு தாயுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களால் அன்சர் பாஷாவை சுற்றி வளைத்து வெட்டினர்.

    அதிர்ச்சி அடைந்த அவர் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடினார். ஆனால், மர்ம கும்பல் அன்சர் பாஷாவை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த அன்சர் பாஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே கொலை கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் முத்துசாமி, உதவி கமி‌ஷனர்கள் அகஸ்டின் ஜான்பால், ஜெயராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் கள்ளக்காதல் தகராறில் அன்சர் பாஷா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    அன்சர் பாஷாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது லட்சுமியின் மகன் பெரிய அஜித்துக்கு தெரிந்ததும் அவர் அன்சர் பாஷாவை கண்டித்தார்.

    மேலும் தனது தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படியும் எச்சரித்தார். ஆனால், அன்சர் பாஷா கள்ளக்காதலி லட்சுமியுடனான தொடர்பை துண்டிக்கவில்லை. தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அன்சர் பாஷா தனது தாயுடன் பேசிக்கொண்டிருந்த போது அருகில் கள்ளக்காதலி லட்சுமியும் இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த லட்சுமியின் மகன் பெரிய அஜித் மற்றும் அவரது கூட்டாளிகள் அன்சர் பாஷாவை வெட்டிக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கொலையுண்ட அன்சர் பாஷாவுக்கும் பெரிய அஜித்துக்கும் கடந்த 2 ஆண்டுகளாகவே மோதல் இருந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு பெரிய அஜித்தின் காதை அன்சர் பாஷா அறுத்துள்ளார்.

    இதேபோல் 2018-ம் ஆண்டு பெரிய அஜித்தும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அன்சர் பாஷாவை கையை வெட்டி உள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அன்சர் பாஷாவுக்கு பர்வின் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனது குழந்தையுடன் புளியந்தோப்பில் தனியாக வசித்து வருகிறார்.

    தலைமறைவான பெரிய அஜித்தை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால்தான் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கூட்டாளிகள் யார்- யார் என்பது தெரிய வரும்.
    Next Story
    ×