search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின்
    X
    உதயநிதி ஸ்டாலின்

    இளைஞர்களிடம் ஒற்றுமை இருந்தால் எதையும் சாதிக்க முடியும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    ராஜபாளையத்தில் தி.மு.க. இளைஞர் பாசறை பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இளைஞர்களிடம் ஒற்றுமை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்றார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாஸ்தாகோவில் நீர்த்தேக்க பகுதியில் தி.மு.க. இளைஞர் பாசறை பயிற்சி கூட்டம் நடந்தது. தனுஷ்குமார் எம்.பி. வரவேற்றார். எம்.எல். ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சீனிவாசன், தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க் கள் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

    தி.மு.க. இளைஞரணியில் 30 லட்சம் இளைஞர்களை இணைப்பது என்ற இலக்கில் பயணம் செய்து வருகிறோம். தற்போது இந்த இலக்கில் 50 சதவீதத்தை நிறைவு செய்து விட்டோம். தற்போது வரை 15 லட்சம் இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.

    மத்திய மந்திரி அமித்ஷா இந்தியை ஆட்சி மொழியாக மாற்றுவோம் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்துவதாக அறிவித்தார்.

    இதற்கு கவர்னர், மு.க. ஸ்டாலினை அழைத்து பேசி போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

    இதில் இருந்தே அடுத்த ஆட்சி தி.மு.க.. அடுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

    தமிழகத்தில் நடைபெறுகின்ற தவறுகளை சுட்டிக் காட்டுவதோடு, அதனை எதிர்த்து களம் காணும் ஒரே இயக்கம் தி.மு.க. தான்.

    கடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காரணம் கட்சியினரிடையே இணக்கமான சூழல் இல்லாததே என்று பலரும் கருத்தை தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொதுக்குழு கூட்டத்தில் சில அறிவுரைகளை எடுத்துரைத்தார். அதனை நாம் அனைவரும் பின்பற்றி எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று தி.மு.க. தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோம்.

    அனைவரும் இணைந்து தி.மு.க.வுக்காக பணியாற்றுவோம். இளைஞர்களிடம் ஒற்றுமை இருந்தால் எதையும் சாதிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டம் நடைபெறும் முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி உருவப்படங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×