search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில்
    X
    தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில்

    சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோவில் கட்டப்படும் - தேவஸ்தான தலைவர்

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிய கோவில் கட்டப்படும் என தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
    சென்னை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புவனேஸ்வர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய 5 இடங்களில் உள்ள திருமலை- திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர சாமி கோவிலில் உள்ளூர் ஆலோசனை குழுக்கள் செயல்படுகிறது. இந்த குழுக்களின் தலைவர்களை ஆந்திர மாநில அரசு தேர்வு செய்து முறைப்படி அறிவித்தது.

    சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை- திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் உள்ளூர் ஆலோசனை குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தியாகராயநகர் திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி தலைமை தாங்கினார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைவர் ஓய்.வி.சுப்பாரெட்டி, துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.பி.கே.வாசுகி, பி.கலையரசன் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.ராஜேந்திரன் பதவி ஏற்றனர். துணைத்தலைவர்களாக ஆனந்தகுமார், பிரபாகர், அனில்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். மேலும், 30 பேர் உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

    பின்னர் ஓய்.வி.சுப்பாரெட்டி, ஏ.ஜெ.சேகர் ரெட்டி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

    திருப்பதி கோவிலில் லட்டு விலையை உயர்த்திவிட்டதாக வந்த தகவல்கள் தவறானவை. பழைய விலையில் தான் லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. லட்டு விலையை உயர்த்துவது குறித்து பரிசீலனையில் இருந்து வருகிறது. வி.ஐ.பி.க்கள் தங்கும் அறை வாடகைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. சாதாரண பக்தர்கள் தங்கும் அறைகள் வாடகை உயர்த்தப்படவில்லை.

    சென்னையில் இருந்து திருமலைக்கு நடைபாதையாக வரும் பக்தர்கள் வசதி கருதி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக வெங்கடேசபெருமாள் கோவில் கட்டுவதற்காக தமிழக அரசு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2 இடங்களை ஒதுக்கி தந்துள்ளது. இந்த இடங்கள் வாஸ்து சாஸ்திரப்படி இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் இடத்தை தேர்வு செய்து தமிழக அரசிடம் அளிப்போம். அதன்பின்பு அரசு அனுமதி அளித்த உடன் கோவில் கட்டுமான பணி தொடங்கப்படும். தியாகராய நகர் கோவிலில் திருப்பதியில் இருப்பது போன்று மொட்டை போடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×