search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குடிக்க பணம் தர மறுத்த மனைவியை எரித்து கொன்ற கணவர் சிறையில் அடைப்பு

    பந்தலூரில் குடிக்க பணம் தர மறுத்த மனைவியை எரித்து கொன்ற கணவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு1 பகுதியை சேர்ந்தவர் கணே‌‌ஷ் ராஜ்(வயது 42). தொழிலாளி.இவருடைய மனைவி சிட்டு(36). கணே‌‌ஷ் ராஜ், தினமும் குடித்துவிட்டு வந்து, போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை கொடுத்தார்.

    இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கணேஷ்ராஜ் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணே‌‌ஷ்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து சிட்டு மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

    உடலில் தீபிடித்து எரிந்ததால் சிட்டு அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிட்டு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கணேஷ் ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×