search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    விருதுநகரில் வியாபாரி, மனைவி - மகனுடன் தற்கொலை

    விருதுநகரில் வியாபாரி, மனைவி, மகனுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் இன்ப மூர்த்தி (வயது 69). இவருக்கு பெரிய வள்ளிகுளத்தில் மல்லி கிட்டங்கி உள்ளது. வடமாநிலங்களில் இருந்து கொத்தமல்லியை மொத்தமாக வாங்கி கிட்டங்கியில் பதப்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கும் இன்பமூர்த்தி விற்பனை செய்து வந்தார். இதனால் விருதுநகரில் அவரை பலரும் மல்லி மூர்த்தி என்றே அழைத்து வந்தனர்.

    இவரது மனைவி திலகவதி (61). மகன் கண்ணன் (40). இவருக்கு திருமணமாகி மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நேற்று காயத்ரி, குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார்.

    இந்த நிலையில் இன்ப மூர்த்தி, திலகவதி, கண்ணன் ஆகியோர் பெரிய வள்ளிகுளம் கிட்டங்கிக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் வி‌ஷம் குடித்து மயங்கினர்.

    இன்று காலை வழக்கம் போல் கிட்டங்கி பணியாளர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது கிட்டங்கியில் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. எனவே அவர்கள் வைத்திருந்த சாவியை கொண்டு திறந்து உள்ளே சென்றனர்.

    அப்போது அங்கு கிட்டங்கி உரிமையாளர் இன்பமூர்த்தி, மனைவி, மகனுடன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சூலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மயங்கிக் கிடந்த 3 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது இன்பமூர்த்தி, கண்ணன் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. திலகவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.

    பிரபல வியாபாரியான இன்பமூர்த்தி எதற்காக தற்கொலை செய்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து சூலக்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×