search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்தது

    ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா நீரை தங்களது பகுதியில் உள்ள மதகுகளை திறந்துவிட்டு வயலுக்கு பாய்ச்சி வருவதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் செப்டம்பர் 28ந் தேதியிலிருந்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கண்டலேறு அணையிலிருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக 800 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. இந்த அணைக்கு சோமசீலா அணையிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். சோமசீலா அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இதனால் நாள் ஒன்றுக்கு அரை டி.எம்.சி. வீதம் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வெறும் 5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்து குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த நிலையில் நெல்லூர் மாவட்டத்தில் பருவ மழை பெய்யவில்லை. பருவ மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் அங்குள்ள விவசாயிகள் நெல் நடவு செய்து இருந்தனர்.

    நெற்பயிரை காப்பாற்ற கண்டலேறு அணையிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி கால்வாயில் உள்ள மதகுகளை திறக்க விவசாயிகள் ஆந்திர அரசை கேட்டு கொண்டனர்.

    இதற்கு அரசு பச்சை கொடி காட்டியதால் ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா நீரை தங்களது பகுதியில் உள்ள மதகுகளை திறந்து விட்டு வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதேபோல் சிறு சிறு ஏரிகளுக்கும் கிருஷ்ணா நதி நீரை திருப்பி உள்ளனர்.

    இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 228 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்து வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை ஏரியில் நீர் மட்டம் 29. 46 அடியாக பதிவானது. 1617 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரிக்கு மழை நீர் வினாடிக்கு 189 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. பூண்டியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 22 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. லிங்க் கால்வாயில் புழல் மற்றும் செம்பரம்பாக்கத்துக்கு 730 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. செப்டம்பர் 28ந் தேதியிலிருந்து இன்று காலை வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2. 187 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

    Next Story
    ×