
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தையகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் வீரசின்னம்மாள்(வயது71). இவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வீரசின்னம்மாளின் அக்காள் பேரன் மதுரையில் டாக்டராக உள்ளார். அவரிடம் வீரசின்னம்மாள் சிகிச்சை பெற்று வந்தார்.
இடுப்பு எலும்பு முறிவால் அவரால் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து டாக்டரின் ஏற்பாட்டில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் மதுரை மஞ்சம்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மகள் பிரதிஷா(வயது18), அவருடன் நர்சிங் படித்து வரும் ஸ்வேதா ஆகிய 2 பேர் வீரசின்னம்மாளை அருகில் இருந்து கவனிக்க வந்திருந்தனர்.
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக இருவரும் வீரசின்னம்மாளின் வீட்டில் இருந்து அவரை பராமரித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த பிரதிஷா தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வீர சின்னம்மாள் இதுபற்றி ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரதிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பிரதிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மகள் மர்மமாக இறந்ததை அறிந்த பிரதிஷாவின் பெற்றோர் சமபவ இடத்துக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.