search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உரிய அனுமதிப்பெற்று ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்

    பெரம்பலூர் நகராட்சி பகுதியில் முறையான அனுமதிப்பெற்று ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது-

    பெரம்பலூர் நகராட்சியில் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகள் உள்ளது. நகராட்சி பகுதியில் மட்டும் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    தண்ணீரின்றி பராமரிக்கப்படாமலும், மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறு மூடவும், சுற்றுச்சுவர் இல்லாத திறந்த வெளி கிணறுகளை பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டி மேல்மூடி போடவும் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி பெரம்பலூர் நகராட்சியில் குடிநீர் விநியோகிக்கும் பணியாளர்கள் மூலம் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் உள்ளது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்பேரில் அரசுக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறுகளாக இருந்தால் நகராட்சி சார்பில் உடனே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் நிலங்களில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருந்தாலும் அவை கண்டறியப்பட்டு உடனே அதன் உரிமையாளர்கள் மூலம் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    மேலும் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை தங்களது வளாகங்களில் உள்ள மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடியும், திறந்த வெளி கிணறு இருந்தால் உடனடியாக சுற்றுச்சுவர் கட்டி பாதுகாக்க வேண்டும். அதற்கான ஆலோசனைகள் தேவைப்பட்டாலும் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் யாராவது அமைப்பதாக இருந்தால் முன்னதாகவே நகராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி கடிதம் பெற விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து நகராட்சி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட இடத்தினை தள ஆய்வு செய்து ஆழ்துளை அமைக்கப்படவுள்ள உள்ள இடம், அதன் பாதுகாப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்த பின்னரே அனுமதி கடிதம் வழங்கப்படும். அனுமதி பெற்ற பின்னரே பொதுமக்கள் தங்களது நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கவேண்டும். அனுமதி பெறாதவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

    எனவே நகராட்சி பகுதியில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு இருந்தால் அதனை உடனடியாக மூடி விபத்துக்களை தவிர்க்கவேண்டும். மேலும் அனுமதி பெற்றபின்னரே ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×