search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்குநேரியில் வாக்கு எண்ணிக்கை மையமான என்ஜினீயரிங் கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.
    X
    நாங்குநேரியில் வாக்கு எண்ணிக்கை மையமான என்ஜினீயரிங் கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை

    நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சென்னை:

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21-ந்தேதி நடந்தது.

    நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜநாராயணன் ஆகியோர் களம் இறங்கினார்கள். பனங்காட்டு படை கட்சி சார்பில் ஹரிநாடார் மற்றும் சுயேட்சைகள் உள்பட 23 பேர் போட்டியிட்டனர்.

    வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 688 வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நாங்குநேரி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 414. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்குகளில் 66.35 சதவீதம். கடந்த பொதுத்தேர்தலில் இந்த தொகுதியில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தேர்தலை புறக்கணித்ததால் 5 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகின.

    வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எந்திரங்கள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் நிறுத்தப்பட்டு வாக்கு எந்திரங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 22 சுற்றுகளில் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. நேரடியாக தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் வாக்கு நிலவரம் தெரியவரும். மதியம் 1 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.

    அரசு என்ஜினீயரிங் கல்லூரி நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் வாயில் அமைக்கப்பட்டுள்ள காட்சி.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ் செல்வன், தி.மு.க. சார்பில் நா.புகழேந்தி, நாம்தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ்பேரரசு கட்சி சார்பில் இயக்குனர் கவுதமன் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.

    தேர்தலையொட்டி 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச் சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்த வாக்குகள் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387. இதில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 659 வாக்குகள் பதிவாகின. இது 84.41 சதவீதம்.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் முத்தாம் பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த அறை பூட்டி சீல்வைக்கப்பட்டது.

    அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

    நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக அங்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. மொத்தம் 22 சுற்றுகள் எண்ணப்படுகிறது.

    சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரமும் தேர்தல் ஆணைய இணையத்தில் நேரடியாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒரு ஏஜெண்டு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

    வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 11 மணி முதல் வெளியாகும். பிற்பகலுக்குள் முன்னணி நிலவரம் தெரிந்து விடும். ஓட்டு எண்ணிக்கையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புவேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×