search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நாகர்கோவிலில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு இணைத்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நாகர்கோவில்:

    நாடு முழுவதும் பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு இணைத்து வருகிறது. மேலும் 10 வங்கிகளை இணைக்கவும் தீர்மானித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும், வராக்கடனை தீவிரமாக வசூலிக்க வேண்டும், கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபராத கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது, சேவை கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகியவை இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்திலும், வங்கி ஊழியர்கள் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

    ஊழியர்களின் போராட்டம் காரணமாக குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான வங்கிகளில் பண பரிவர்த்தனை நடை பெறவில்லை. பெரும் பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதனால் வங்கிகளில் பணம் எடுக்கவும், பணம் போடவும் முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிக்கு ஆளானார்கள்.

    குமரி மாவட்டத்தில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் நாகர்கோவில் கேப் ரோட்டில் உள்ள கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்துக்கு குமரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரகுநாதன், சாகுல்அமீது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    இதில் மாவட்டம் முழுவ திலும் இருந்து 650-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    போராட்டம் குறித்து குமரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சிதம்பரம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் 250 வங்கி கிளைகளை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளனர். போராட்டம் காரணமாக வங்கிகளில் பணி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.200 கோடிக்கு பண பரிவர்த்தனை முடங்கும்.

    வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×