search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தவளக்குப்பத்தில் வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் நகையை திருடிய வாலிபர் கைது

    தவளக்குப்பத்தில் குடிபோதையில் இருந்த வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் நகையை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    புதுவை தவளக்குப்பம் திருமலை நகரை சேர்ந்தவர் பூபதிராஜா (வயது39). இவர் ஆன்-லைன் மூலம் வியாபாரம் செய்து வருகிறார். பூபதிராஜாவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இதையடுத்து பூபதிராஜா நேற்று முன்தினம் மதுகுடிக்க தவளக்குப்பத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். அப்போது தேர்தலையொட்டி மதுக்கடை பூட்டப்பட்டு இருந்ததால் அதிக விலைக்கு யாரேனும் மதுப்பாட்டில்கள் விற்கிறார்களா என அங்கு காத்து இருந்தார்.

    அப்போது அங்கு வந்த தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரை சேரந்த செல்வக்குமார் (24) மற்றும் பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்த நாகமுத்து (26) ஆகியோர் பூபதிராஜாவிடம் பேச்சு கொடுத்தனர். புதுக்குப்பத்தில் மதுப்பாட்டில் விற்பதாகவும் அங்கு சென்று மதுப்பாட்டில்களை வாங்கி வரலாம் எனகூறி அவர்கள் பூபதிராஜாவை அழைத்து சென்றனர். ஆனால் அங்கு மதுப்பாட்டில்கள் எதுவும் விற்கப்படவில்லை.

    இதையடுத்து பூபதிராஜா தனது வீட்டில் உயர்ரக மதுபாட்டில் வைத்திருப்பதாகவும் அதனை 3 பேரும் சேர்ந்து குடிக்கலாம் என்று செல்வக்குமாரையும், நாகமுத்துவையும் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு 3 பேரும் வீட்டில் இருந்த மதுவை பங்கீட்டு குடித்தனர். வீட்டிலேயே மூட்டை ஆம்லெட்டு, ஆப்-ஆயில் போன்றவற்றை நாகமுத்து தாயார் செய்து பூபதிராஜாவுக்கு கொடுத்தார். போதையில் பூபதிராஜா மயங்கி விட்ட நிலையில் அவர் அணிந்திருந்த 2 பவுன் மோதிரம், 2½ பவுன் செயின் மற்றும் செல்போன் ஆகியவற்றை செல்வகுமார் திருடி கொண்டு நைசாக வீட்டை விட்டு வெளியேறினார். இதன் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்

    போதை தெளிந்த பின்னர் பூபதிராஜா பார்த்தபோது நகைகள் மற்றும் செல்போன் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நடந்த சம்பவத்தை தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரில் செல்போன் மற்றும் நகைகளை செல்வகுமார் திருடி சென்று விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து நகை மற்றும் செல்போனை திருடி சென்ற செல்வகுமாரை தேடிவந்தனர். அப்போது அங்குள்ள சாராயக்கடை அருகே சுற்றி திரிந்த செல்வகுமாரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் பூபதிராஜாவிடம் இருந்த நகை மற்றும் செல்போனை திருடிசென்றதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 4½பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×