search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொட்டியம்மாள்
    X
    பொட்டியம்மாள்

    2 மாத பெண் குழந்தை சாவு- குருணை மருந்து கொடுத்து கொன்ற பாட்டி கைது

    போச்சம்பள்ளி அருகே பிறந்து 2 மாதமே ஆன பெண் குழந்தையை குருணை மருந்து கொடுத்து கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பாரூர் நாகர்குட்டை பகுதியை சேர்ந்தவர் யோசிராஜா (வயது 25). கூலித் தொழிலாளியான இவருக்கு சத்யா(வயது 22) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஸ்ரீமதி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். இதனை அடுத்து சத்யாவிற்கு பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வீட்டிற்கு குழந்தையுடன் சென்ற சத்யா, குழந்தையை பராமரித்து வந்தார்.

    செவிலியர் மங்கை மாதம் மாதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக நாகர்குட்டை பகுதிக்கு செல்வார். அவர் சத்யாவின் பெண்குழந்தைக்கும் தடுப்பூசி போட்டு வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 22-ந்தேதி செவிலியர் மங்கை சத்யா வீட்டிற்கு சென்று குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சத்யா தன் குழந்தையை தனது அக்கா எடுத்து சென்றுள்ளார் என முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த செவிலியர் நடத்திய விசாரணையில், சத்யாவின் குழந்தை மூச்சுத் திணறி இறந்துவிட்டது என அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செவிலியர் மங்கை காவேரிப்பட்டிணம் வட்டார மருத்துவர் டாக்டர் ஹரிராமிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஹரிராம் இதுகுறித்து பாரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் குழந்தையின் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து காவேரிப்பட்டினம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஹரிராம் மற்றும் மருத்துவ குழுவினர்கள் நேரில்சென்று குழந்தையை புதைத்த இடத்தை தோண்டி அங்கேயே குழந்தையின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் உடற்கூறுகளை எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின்போது குழந்தையின் சாவு வெளிச்சத்திற்கு வந்தது. குழந்தை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யப்பட்டதா? இயற்கை முறையில் இறந்ததா? என மருத்துவ குழுவினர் சந்தேகத்தின்பேரில் தெரிவித்தனர். இதையடுத்து கிராமத்தில் பரபரப்பு காணப்பட்டது.

    இதையடுத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தையின் பாட்டி அதாவது யோசிராஜாவின் தாயாரான பொட்டியம்மாள் குருணை மருந்து கொடுத்து குழந்தையை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பொட்டியம்மாளை பாரூர் போலீசார் கைது செய்தனர்.

    கைதான பொட்டியம் மாள் சேலம் சிறையில் போலீசார் அடைத்தனர்.
    Next Story
    ×