search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    டெல்டா மாவட்டங்களில் கனமழை - மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

    டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகி உள்ளனர்.
    அதிராம்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், வல்லம், குருங்குளம், திருவையாறு, பூதலூர், பட்டுக்கோட்டை, அதிராம் பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.தொடர் பெய்து வரும் மழையால் தற்போது சம்பா சாகுபடி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தீபாவளியையொட்டி சாலையோரம் வியாபாரம் செய்து வரும் தரைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மழை தண்ணீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    தஞ்சையில் பெய்து வரும் மழையால் சமுத்திரம் ஏரி நிரம்பி தண்ணீர் வழிந்தோடியது. ஏரி நிரம்பியதால் கடல்போல் காட்சியளிக்கிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை பெய்து வருகிறது

    இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் கடற்கரை ஓரங்களில் பெய்த தொடர் மழையினால் தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் கன மழையால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கின.

    இதேபோல் நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். முத்துப்பேட்டை அருகே சங்கேத்தி சம்பா கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தம் (வயது 35).இவரது மனைவி லிசா(26).

    இந்த நிலையில் நேற்று லிசாவின் மாமனார் அசோக், வீட்டில் மின்மோட்டாரை சீரமைத்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் அவரை தாக்கியது. இதனால் சத்தம் கேட்டு வந்த லிசா, கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தார். இதில் அவர் மின்சாரம் தாக்கி உடல் கருகினார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு எடையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்கார்.

    கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் அடுத்த செட்டிசிமிழி கிராமத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (70). விவசாயி. இவர் நேற்று வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



    Next Story
    ×