search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
    X
    தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி

    தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது50). இவரது மனைவி செந்தாமரை (45).

    இவர்கள் 2 பேரும் இன்று காலை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்தபோது கணவன்-மனைவி 2 பேரும் திடீரென்று மண்எண்ணை கேனை எடுத்து தங்களது உடல்களில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் கண்டு உடனே கணவன்- மனைவி 2 பேரின் உடல்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் முத்துசாமி- செந்தாமரை ஆகிய 2 பேரிடம் விசாரித்தனர்.

    எங்களுக்கு கார்த்திக் (22) என்ற மகன் உள்ளார். அவர் போலீஸ் வேலையில் சேருவதற்காக பயிற்சி வகுப்பில் படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் 17 வயது மகளை காதலித்து வந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த லட்சுமணன் தனது மகளுக்கு யாருக்கும் தெரியாமல் கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைத்தாக தெரிகிறது.

    இதனால் அந்த சிறுமி தற்கொலைக்கு முயன்று உள்ளார். இந்த சம்பவத்தால் எனது மகன் மனமுடைந்து காணப்பட்டார். அவரும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் அந்த சிறுமியின் தந்தை லட்சுமணனும், அவரது உறவினர்களும் சேர்ந்து இனி அந்த சிறுமியை பார்க்கக்கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து நாங்கள் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுமியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தோம். ஆனால், அந்த புகார் மீது போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, எங்களது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கலெக்டர் மலர்விழியை சந்தித்து மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர்.

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணவன்- மனைவி தீக்குளிக்க முயன்றதால் அவர்களை தர்மபுரி டவுன் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×