search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்
    X
    இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்

    விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரசாரம் ஓய்ந்தது: மு.க.ஸ்டாலின் - விஜயகாந்த் போட்டி பிரசாரம்

    விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
    சென்னை:

    தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றது.
     
    நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன், பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரிநாடார் உள்ளிட்ட 23 பேர் போட்டியிடுகின்றனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சி சார்பில் இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர். அவர்கள் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க.-திமு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்தார்.

    தலைவர்களின் அடுத்தடுத்த வருகையால் கடந்த 15 நாட்களாக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் பிரசாரம் அனல் பறந்தது.

    அதிமுகவுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரசாரம்

    இந்நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு ஆதரவு கேட்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும், தி.மு.க.வுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    விக்கிரவாண்டியின் முண்டியம்பாக்கத்தில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அதிமுகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது என தெரிவித்தார்.

    இதேபோல், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
    Next Story
    ×