search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் கந்தசாமி
    X
    கலெக்டர் கந்தசாமி

    பயனாளிகளுக்கு வீடு வழங்கவில்லை என்றால் அதிகாரிகள் சஸ்பெண்டு- வாட்ஸ்அப்பில் கலெக்டர் எச்சரிக்கை

    பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து தொடர்ந்து திங்கட்கிழமைக்குள் பயனாளிகளுக்கு வீடு வழங்கவில்லை என்றால் சஸ்பெண்டு செய்ய தயாராக இருக்கிறேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியின் ஆவேச பேச்சு ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவுகிறது.
    திருவண்ணாமலை:

    பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து தொடர்ந்து திங்கட்கிழமைக்குள் பயனாளிகளுக்கு வீடு வழங்கவில்லை என்றால் சஸ்பெண்டு செய்ய தயாராக இருக்கிறேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியின் ஆவேச பேச்சு ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவுகிறது.

    அந்த ஆடியோவில் கலெக்டர் கந்தசாமி பேசியிருப்பதாவது:-

    வணக்கம் நான் கலெக்டர் பேசுகிறேன். கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தோம். கடந்த முறை வீடு வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கும், பொருளாதார கணக்கெடுப்பில் எடுத்தவர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் அந்த வீடு யாருக்கும் போகமாட்டேன்கிறது. ஏனென்றால் நிறைய புகார்கள் தினந்தோறும் வந்து கொண்டு இருக்கிறது. இன்று நடந்த விவசாயிகள் குறை தீர்வுநாள் கூட்டத்திலும் இது குறித்து புகார்கள் வந்து உள்ளன.

    வருகிற திங்கட்கிழமை தான் உங்களுக்கு கடைசி. நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா அல்லது நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். திங்கட்கிழமைக்குள் பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கி தரவேண்டும்.

    இல்லையென்றால் பஞ்சாயத்து செயலாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலர், துணை ஊராட்சி ஒன்றிய அலுவலர் உள்ளிட்டோரை சஸ்பெண்டு செய்ய நான் தயாராக இருக்கிறேன். இதனை நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ளலாம். நீங்கள் தவறு செய்வதை பார்த்து கொள்ள நான் இங்கு உட்காரவில்லை.

    தப்பு செய்பவர்களுக்கு காவல் காப்பவன் நான் இல்லை. இதுவே கடைசி. இது என்னுடைய உச்சக்கட்ட கோபம். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும், பஞ்சாயத்து செயலாளர்களும் இதனை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டும். திங்கட்கிழமை நீங்கள் வேலைக்கு வந்து விட்டு, மாலையில் வேலையில்லாமல் போறீங்களா என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். நான் இதனை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார்.

    இந்த வாய்ஸ் மெசேஜை கலெக்டர் கந்தசாமி அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

    இதையடுத்து சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரபியுல்லா பணி மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
    Next Story
    ×