search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி

    திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பரிதாபமாக இறந்தார். குற்றவாளிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    திருச்சிற்றம்பலம்:

    திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகி புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், விவசாயி. இவரது மனைவி போத்தியம்பாள். இவர்களது மகள் சுவேதா (வயது 3). சுவேதா அப்பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடியில் படித்து வந்தார்.

    கடந்த 11-ந்தேதி அங்கன்வாடிக்கு சென்று கொண்டிருந்த சுவேதா மீது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் மோதி விட்டு தப்பிச் சென்று விட்டனர். படுகாயம் அடைந்த சிறுமி சுவேதா பேராவூரணி மருத்துவ மனையிலும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சுவேதா இறந்தார். 

    இதுகுறித்து சிறுமியின் தந்தை அருண்குமார் திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில், விபத்து நடந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில்இருந்த சி.சி.டி.வி. கேமரா மூலம் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு சென்றவர்கள் யார்? என்பதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்டு பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தாமதப்படுத்துவதாக கூறி நேற்று ஆவணம் அக்னி பஜார் பகுதியில் பொதுமக்கள் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மனோஜ்குமார் (23), அதே கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் செந்தமிழன் (19) ஆகிய 2 பேரும் நேற்று திருச்சிற்றம்பலம் போலீசில் சரண் அடைந்தனர்.

    Next Story
    ×