search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை

    கோவையில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சிங்காநல்லூர்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி லீலாவதி. இவர்களது மகள் வேதவள்ளி (41). இவருக்கும் கண்ணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு 5 வயதில் கார்குழலி என்ற பெண் குழந்தை இருந்தது. கண்ணன் அமெரிக்காவில் சாப்ட் வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 8 மாதத்திற்கு முன் இறந்து விட்டார்.

    முதலில் பெங்களூருவில் வசித்து வந்த ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் கண்ணன் இறந்த பின் கடந்த 6 மாதத்திற்கு முன் கோவை வந்தனர். ஒண்டிப்புதூர் காமாட்சி நகர் பகுதியில் குடியிருந்து வந்தனர். பட்டணம் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு குழந்தை கார் குழலிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    அதனை குழந்தையின் தாத்தா ராமகிருஷ்ணன், பாட்டி லீலாவதி மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி குழந்தை இறந்தது.

    இந்த தகவல் வீட்டில் இருந்த வேதவள்ளிக்கு தெரிய வந்தது. அவர் அதிர்ச்சி அடைந்தார் ஆவேசம் அடைந்த அவர் வீட்டில் இருந்த கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்.

    திடீரென அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் உறவினர்கள் அங்கு திரண்டனர்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் பாலாஜி சரவணன், உதவி கமி‌ஷனர் சோம சுந்தரம், சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தற்கொலை செய்த வேதவள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் உடலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    வேதவள்ளி தனது குழந்தையை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    குழந்தையை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்தாரா? அல்லது உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொன்றாரா? எதற்காக குழந்தையை கொன்று தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக வேதவள்ளி தந்தை ராமகிருஷ்ணன், தாய் லீலாவதி, சகோதரர் மாதவன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமகிருஷ்ணன் முன்னுக்குபின் முரணாக கூறி வருவதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×