search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    5 ரெயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்ட 5 ரெயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக்கூடாது என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை-மாமல்லபுரம்- புதுச்சேரி- கடலூர், சென்னை ஆவடி-கூடுவாஞ்சேரி, திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, ஈரோடு-பழனி, அத்திப்பட்டு-புத்தூர் ஆகிய 5 ரெயில் திட்டங்களுக்கு எந்தவித செலவும் மேற்கொள்ளக்கூடாது என்று இந்திய ரெயில்வே வாரியம் தென்னக ரெயில்வே துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக இந்த திட்டங்கள் அனைத்தும் கைவிடப்படும் நிலை உள்ளது.

    இந்திய ரெயில்வே வாரியம் கைவிடும்படி அறிவுறுத்தி உள்ள 5 திட்டங்களுமே பா.ம.க.வைச் சேர்ந்த வேலு, மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்த போது தமிழகத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும்.

    2008-2009-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி சென்னை பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் வரை 178 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அந்த திட்டத்திற்காக ரூ.523 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரைச் சாலைக்கு இணையாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

    கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டத்திற்காக சென்னையில் இருந்து கடலூர் வரை புதிய பாதை அமைக்கப்படும்பட்சத்தில், கடலூர் முதல் காரைக்குடி வரை இப்போதுள்ள பாதையை மேம்படுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு 463 கிலோ மீட்டர் புதிய பாதை அமைக்கலாம் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டு ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

    இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு 2009-ம் ஆண்டில் அமைந்த புதிய அரசில் பா.ம.க. பங்கேற்காத நிலையில், தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்காததால் இந்த திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால், காரைக்குடி, கன்னியாகுமரி புதிய ரெயில் பாதை திட்டத்தை முதலில் கைவிட்ட ரெயில்வே வாரியம், இப்போது அடுத்தக்கட்டமாக சென்னை- மாமல்லபுரம்- கடலூர் திட்டத்தையும் கைவிட்டிருக்கிறது.

    பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பால் மாமல்லபுரம் உலகப்புகழ் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை பொழுதுபோக்கு சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் கடுமையான நெரிசல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் கிழக்கு கடற்கரை ரெயில் பாதை அமைக்கப்பட்டால் அது சுற்றுலா வளர்ச்சிக்கும், தென் மாவட்டங்களுக்கும் கூடுதல் ரெயில்களை இயக்குவதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

    ஆவடி-கூடுவாஞ்சேரி இடையிலான ரெயில்பாதை ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லவும் உதவும்.

    அத்திப்பட்டு-புத்தூர் ரெயில் பாதை அமைக்கப்படும் பட்சத்தில் சென்னை-திருவள்ளூர் வழித்தடத்தில் நெரிசல் குறைவதுடன், எண்ணூர் துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.

    திண்டிவனம்-திருவண்ணாமலை ரெயில் பாதையும், ஈரோடு-பழனி ரெயில் பாதையும் ஆன்மிகப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அந்த பகுதிகளின் தொழில் வளர்ச்சிக் கும் இந்த திட்டங்கள் வழிவகுக்கும். எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய இந்த 5 ரெயில் திட்டங்களையும் ரத்து செய்யும் முடிவை ரெயில்வே வாரியம் கைவிட வேண்டும். மாறாக, மாநில அரசுடன் இணைந்து இந்த 5 திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×