search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட பிரசாந்த்
    X
    கொலை செய்யப்பட்ட பிரசாந்த்

    மேட்டுப்பாளையத்தில் வாலிபர் குத்திக்கொலை- தாய்மாமன் கைது

    மேட்டுப்பாளையத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாய்மாமனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வேளாங்கண்ணி நகர் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் சசிதரன்(வயது 57). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா(47). இவர்களுக்கு பிரசாந்த்(25) என்ற மகன் உள்ளார்.

    இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சசிதரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார்.

    சுதாவின் அண்ணன் சுரேஷ்(45). லாரி டிரைவர். இவர் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் வசித்து வருகிறார். இவர் தினமும் தனது சகோதரியின் கணவரான சசிதரனை மதுகுடிக்க அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது காலில் காயம் ஏற்பட்டு வீட்டில் இருக்கும்போதும் குடிக்க அழைத்து சென்றார்.

    இதனை சசிதரன் மனைவி தட்டி கேட்டார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் சுதாவுக்கும், சுரேசுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. சுதா இதுகுறித்து தனது மகனிடம் தெரிவித்தார்.

    இதுபற்றி அறிந்த பிரசாந்த் நேற்று மதியம் தனது தாய்மாமன் வீட்டிற்கு சென்று அவரிடம் எனது தந்தை தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரை எப்படி குடிக்க அழைத்து செல்லலாம் என கூறியுள்ளார். அப்போது சுரேஷ் குடிபோதையில் இருந்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சுரேஷ் தான் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்தின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்- இன்ஸ்பெக்டர்கள் திலக், பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய பிரசாந்தை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கத்தியால் குத்திய சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×