search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகை பறிப்பு
    X
    தங்க நகை பறிப்பு

    சேவூர் அருகே மூதாட்டியிடம் 6½ பவுன் தாலிக்கொடி பறிப்பு

    சேவூர் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    சேவூர்:

    சேவூர் அருகே உள்ள கானூர் ஊராட்சி, கஸ்பாகானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகசாமி மனைவி பூவாத்தாள்(வயது 70). இந்த நிலையில் இவர் சின்னக்கானூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம ஆசாமி, நடந்து சென்று கொண்டிருந்த பூவாத்தாள் அருகே வந்தார். பின்னர், முகவரி கேட்பது போல் விசாரித்து விட்டு, நானும் உங்கள் வீட்டிற்கு அருகில் தான் செல்கிறேன். வாருங்கள் உங்களை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார்.

    இதை நம்பிய பூவாத்தாள் அந்த ஆசாமியின் மோட்டார்சைக்கிளின் பின் இருக்கையில் ஏறி, அமர்ந்து சென்றார். சிறிது தூரம் சென்றவுடன், மோட்டார்சைக்கிளில் முன்புறம் வைத்திருந்த காலி கியாஸ் சிலிண்டரை வேண்டுமென்றே மர்ம ஆசாமி கீழே தள்ளி விட்டு, எடுத்து வைக்க உதவுமாறு பூவாத்தாளிடம் கூறியுள்ளார்.

    இதைத்கேட்ட பூவாத்தாள் உடனடியாக கீழே இறங்கி குனிந்து கியாஸ் சிலிண்டரை தூக்கும் போது மர்ம ஆசாமி, பூவாத்தாள் அணிந்திருந்த 6½ பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டார்.

    உடனடியாக திருடன், திருடன் என பூவாத்தாள் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பூவாத்தாள் கணவருக்கு இது பற்றி தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த முருகசாமி இது குறித்து போலீசில் புகார்அளித்தார்.

    அதன் பேரில், சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×