search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கியாஸ் சிலிண்டர்
    X
    கியாஸ் சிலிண்டர்

    சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து, கியாஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்து இருக்கிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயித்து வருகின்றன.

    இந்தநிலையில் சவுதி அரேபியாவில் எண்ணெய் வயலில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, சர்வதேச சந்தையில் சவுதி அரேபியா அரசின் கச்சா எண்ணெய் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்கள் முன்புபோல கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவ தொடங்கியுள்ளது.

    இதனால் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துகொண்டு இருக்கிறது. இப்போது அந்த வரிசையில் கியாஸ் விலையும் இடம்பிடித்து உள்ளது.

    நாடு முழுவதும் நடப்பு மாதத்துக்கான (அக்டோபர்) கியாஸ் சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டது. இதில் முந்தைய மாதத்தை காட்டிலும் விலை வெகுவாகவே உயர்ந்திருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.606.50 ஆக இருந்தது. தற்போது அது ரூ.620 ஆக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் இந்த மாதம் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.13.50 அதிகரித்து உள்ளது.

    வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1,174.50-ஆக இருந்தது. தற்போது ரூ.24.50 அதிகரித்து, ரூ.1,199 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    அதேபோல மானியமில்லா சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.590 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.616.50 ஆகவும், மும்பையில் ரூ.562 ஆகவும் இருந்தது. தற்போது முறையே அவை ரூ.15, ரூ.13.5 மற்றும் ரூ.12.5 விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

    சென்னையில் கடந்த மாதம் மானியத்துடன் கூடிய சிலிண்டர் ரூ.693.69-க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மானியமாக வாடிக்கையாளர் வங்கிக்கணக்குக்கு ரூ.87.19 வரவு வைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×