search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெல்மெட்
    X
    ஹெல்மெட்

    ஹெல்மெட் அணியாவிட்டால் விருதுநகருக்குள் நுழைய தடை: போலீசார் நடவடிக்கை

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை விருதுநகருக்குள் நுழைய போலீசார் அனுமதி அளிக்காமல் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

    விருதுநகர்:

    வாகன விபத்துக்களை தடுக்க மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவை தமிழக அரசும் தீவிரப்படுத்தி உள்ளது. ஹெல்மெட் அணியாமல் சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி அதிகபட்ச அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்த போலீசாரும், அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் நாள்தோறும் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஏராளமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஹெல்மெட் அணியாமல் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதை தடுக்க மாவட்ட போலீசார் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அதன்படி இன்று விருதுநகர் நகருக்குள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் நுழைய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் வெளியூர்களில் இருந்து விருதுநகருக்குள் நுழைபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இன்று காலை முதல் விருதுநகர் நகர் எல்லையில் உள்ள சிவகாசி-பை பாஸ் ரோடு சந்திப்பு, மதுரை- பைபாஸ் ரோடு சந்திப்பு, கல்லூரி சாலை, அருப்புக்கோட்டை சாலை, அரசு ஆஸ்பத்திரி சாலை, ரெயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட 9 முக்கிய சாலைகளில் போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நகரில் இருந்து வெளியே சென்றவர்களும், நகருக்குள் செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து இருக்கிறார்களா? என கண்காணிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாதவர்கள் நகருக்குள் உள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களை போலீசார் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் என அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்காமல் போலீசார் அறிவுரை கூறியது பொது மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×