search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை- நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு

    பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில் பேசிய விஜய் பேசியது ஆளுங்கட்சியை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்திருந்தது. இந்த செய்தி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் பேச்சுக்கு ஆளுங்கட்சி தரப்பில் பதிலடி கொடுத்தனர்.

    பிகில் இசை வெளியிட்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், பிகில் பட இசை விழா நடத்த, எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விஜய்க்கு எதிராக ஆளுங்கட்சியினர் காய்நகர்த்தத் தொடங்கி உள்ளதாகவும் பேசப்படுகிறது.

    இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் விஜய்யின் பிகில் திரைப்பட ஒலி நாடா வெளியீட்டு  விழாவுக்கு அனுமதி வழங்கியதற்காக சாய்ராம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், கல்லூரி வளாகத்தில் அரசியல் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு அனுமதி அளித்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஆனால், இந்நிகழ்ச்சி கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட அரங்கத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் இது ஒரு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

    நடிகர் விஜய்

    பிகில் திரைப்பட ஒலி நாடா வெளியீட்டு விழாவில் விஜய் உரையாற்றியதில் சில கருத்துக்கள் ஆளுங்கட்சியினருக்கு எதிராக கூறியதாக தவறாக புரிந்துகொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது.

    நடிகர் விஜய் பொதுவாக பேசியதை அதிமுகவினருக்கு எதிராக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் புரிந்துகொண்டிருக்கிறார். விஜய் அரசியல் பேசியதற்காக கல்லூரி நிர்வாகம் அச்சுறுத்தலுக்கு இரையாக்கப்பட்டிருக்கிறது.

    எனவே, கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீசை உயர்கல்வித்துறை திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறாவிட்டால் கடும் விளைவுகளை ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×