search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    செய்துங்கநல்லூர் அருகே விவசாயிகளை அரிவாளால் வெட்டிய அண்ணன்-தம்பி

    செய்துங்கநல்லூர் அருகே விவசாயிகளை அரிவாளால் வெட்டிய அண்ணன் தம்பி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ராமானுஜம்புதூரை சேர்ந்தவர்கள் சங்கர நாராயணன் (வயது 50), ஆயிரம் (50), பூவலிங்கம் (38). விவசாயிகளான இவர்கள் 3 பேரும் நேற்று இரவில் ராமானுஜம்புதூர் மெயின் ரோடு கிருஷ்ணர் சிலை அருகில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்தவாறு 4 மர்மநபர்கள் கைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் திடீரென்று சங்கர நாராயணன், ஆயிரம், பூவலிங்கம் ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பின்னர் 4 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து படுகாயமடைந்த சங்கர நாராயணன், ஆயிரம், பூவலிங்கம் ஆகிய 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயிகளை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முன்விரோதம் காரணமாக இலுப்பைக்குளத்தை சேர்ந்த பூல்பாண்டி மகன்கள் ராமசாமி மற்றும் கொம்பையா உள்ளிட்ட 3 பேர் விவசாயிகளை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×