search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராதாபுரம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

    ராதாபுரம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வையகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பன் (வயது50). இவரது மனைவி தெய்வக்கனி (45). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

    மகளுக்கு திருமணமாகி விட்டது. 3 மகன்களில் மூத்த மகன் ஜே.சி.பி. டிரைவராக உள்ளார். மற்ற 2 பேரும் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் தங்கி படித்து வருகின்றனர். மாரியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் மது பழக்கத்தால் மாரியப்பன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், குடிபழக்கத்தால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மது குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மாரியப்பன் மீண்டும் மது குடித்தபடி இருந்துள்ளார். சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மாரியப்பனை அவருடைய மனைவி தெய்வக்கனி கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து மனைவியை மாரியப்பன் திட்டியுள்ளார். டாக்டர் கூறியபடி கணவர் நடக்காமல் இருந்தது மட்டுமின்றி, தன்னை திட்டியதால் மனவேதனையில் இருந்து வந்த தெய்வக்கனி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    தெய்வக்கனி சாவுக்கு நீதான் காரணம் என்று அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மாரியப்பனை திட்டியுள்ளனர். இதனால் மனைவி இறந்ததில் இருந்து வேதனையுடன் மாரியப்பன் சுற்றி வந்துள்ளார்.

    இந்தநிலையில் வையக்கவுண்டன்பட்டி அருகே சமூகரெங்கபுரம் பகுதியில் ரோட்டோரம் இருந்த மரத்தில் மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். அவர் மரத்தில் பிணமாக தொங்குவதை இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ராதாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விணுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மது பழக்கத்தால் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மற்றும் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×