search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்: புதுப்பெண்ணை கடத்தி வசியம் செய்ய முயற்சி

    இரணியல் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த புதுப்பெண்ணை கடத்தி வசியம் செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடை அடுத்த கொடுப்பைகுழியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கும் காரங்காடு பகுதியைச் சேர்ந்த அனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் இந்த காதல் விவகாரம் வெளியில் தெரிய வந்ததும் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் காதல் ஜோடி பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுரேஷ்குமாரும், அனிஷாவும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு காதல் ஜோடி ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் அவர்கள் இருவரையும் அவர்களது பெற்றோரும், உறவினர்களும் தேடத் தொடங்கினார்கள்.

    அவர்கள் பிடியில் சிக்கினால் தங்கள் இருவரையும் சேர்ந்து வாழ விடாமல் பிரித்து விடுவார்கள் என்று பயந்து போன சுரேஷ்குமாரும், அனிஷாவும் இரணியல் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் இருவரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்த காதலை ஏற்க பெற்றோர் மறுத்தனர்.

    அதே சமயம் காதல் ஜோடி தாங்கள் சேர்ந்து வாழ்வதில் பிடிவாதமாக இருந்தனர். சுரேஷ்குமாரும், அனிஷாவும் மேஜர் என்பதால் அவர்கள் இருவரும் புது வாழ்க்கையை தொடங்க போலீசார் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சுரேஷ் குமார் தனது காதல் மனைவி அனிஷாவுடன் நாகர்கோவில் வடசேரி பரமார்த்தலிங்கபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்திருந்தார். இந்த தகவல் அறிந்ததும் நேற்றிரவு அனிஷாவின் உறவினர்கள் 8 பேர் ஒரு காரில் அங்கு வந்தனர். அவர்கள் அனிஷாவை காரில் தூக்கிப்போட்டு கடத்திச் சென்றனர்.

    அந்த கார் இரணியல் அருகே உள்ள ஒரு மந்திரவாதியின் வீட்டிற்கு சென்றது. அங்கு மந்திரவாதி மூலம் அனிஷாவுக்கு வசியம் செய்ய முயற்சி நடந்தது. அவர், தனது காதல் கணவரை மறந்து விட்டு பெற்றோருடன் செல்வதற்காக மந்திரவாதி வசிய பூஜையும் நடத்தினார். இதனால் பயந்து போன புதுப்பெண் அனிஷா மந்திரவாதியிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். அவரை உறவினர்கள் விரட்டி கொண்டு சென்றனர். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் அனிஷாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் இரணியல் பகுதியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் காரணமாக பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    அவர்கள் அனிஷாவின் உறவினர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை அவரது உறவினர்கள் காரில் கடத்தி மந்திரவாதி மூலம் வசியம் செய்ததும் அவர்களிடமிருந்து புதுப்பெண் தப்பி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து உறவினர்களை எச்சரித்து அங்கிருந்து பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த அனிஷாவை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வடசேரி போலீசார் அங்கு சென்று அனிஷாவிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர், தன்னை காரில் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×