search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    ஜாதி, மத உணர்வுகளை திமுக தூண்டி விடுகிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

    வாக்கு வங்கிக்காக ஜாதி, மத உணர்வுகளை தி.மு.க. தூண்டி விடுகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார்.
    சிவகாசி:

    சிவகாசியில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் தகுதி அ.தி.மு.க.விற்கு தான் உண்டு. சென்னை ராபின்சன் பூங்காவில் அண்ணா கொட்டும் மழையில் தி.மு.க.வை தொடங்கிய போது கருணாநிதி அதை இழிவுபடுத்தி பேசினார். ஆனால் அதன் பின்பு ஆட்சியை வஞ்சகமாக கைப்பற்றினார்.

    அதன் பின்னர் அது கருணாநிதியின் தி.மு.க.வாகத்தான் இருந்தது. தற்போது ஸ்டாலின் தி.மு.க.வாக உள்ளது. தி.மு.க. வில் வாரிசு அரசியல் தான் இருக்கிறது.

    கருணாநிதி, ஸ்டாலினை முத்தமிட்டார். ஸ்டாலின் தற்போது உதயநிதி ஸ்டாலினை முத்தமிட்டுள்ளார். அடுத்து உதயநிதி ஸ்டாலின் அவரது மகனை முத்தமிடுவார். இதுதான் தி.மு.க.வின் நிலை.

    ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் ஏழை தொண்டனும் கோட்டையில் உட்கார வாய்ப்பு கிடைக்கும். இன்று இல்லாவிட்டாலும் நாளை பதவி கிடைக்கும்.

    கருணாநிதி 46 ஆண்டு காலமாக அ.தி.மு.க.வை வீழ்த்த நினைத்தார். அது முடியவில்லை. தற்போது ஸ்டாலின் அ.தி.மு.க.வை ஒழித்து விடுவேன் என்கிறார்.

    ஆனால் அவரால் ஒன்றும் செய்து விட முடியாது. அ.தி.மு.க. இருக்கும் வரை தமிழக மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். தமிழ் மக்கள் இருக்கும் வரை அ.தி.மு.க.விற்கு வீழ்ச்சி என்பதே கிடையாது.

    வாக்கு வங்கிக்காக தி.மு.க. ஜாதி, மதத்தை துண்டிவிட்டு அரசியல் செய்கிறது.

    இப்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தி.மு.க. கையில் எடுத்துள்ளது. தி.மு.க. குடும்பத்தில் அனைவரும் இந்தி, ஆங்கிலம் பேசுவார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இந்தி பேசக்கூடாது, படிக்கக் கூடாது என்று போராட்டம் செய்கின்றனர்.

    பாராளுமன்றத்தில் தமிழ் வாழ்க என்று கோ‌ஷம் போட்டுவிட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகின்றனர். தி.மு.க.வின் இரட்டை வேடம் நீண்ட நாட்கள் நீடிக்காது. நான் 9 ஆண்டுகளாக தமிழில் தான் கையெழுத்து போட்டு வருகிறேன். தமிழை விற்று பிழைக்கின்ற கூட்டமாக தி.மு.க. உள்ளது.

    புரட்சித்தலைவர் உருவாக்கி புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்ட அண்ணா தி.மு.க.வை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது.

    வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற நாங்கள் இப்போதே தேர்தல் வியூகம் அமைத்து வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சுந்தர பாண்டியன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், சிவகாசி நகர செயலாளர் அசன் பதூருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் பலராம், புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டு ராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் கணேசன் உட்பட கட்சியின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×