search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கப்பலூர் சுங்கச்சாவடி துப்பாக்கி சூடு வழக்கு: தப்பி ஓடிய ரவுடி கைது தனிப்படை போலீசார் நடவடிக்கை

    கப்பலூர் சுங்கச்சாவடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தப்பி ஓடிய ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு, கடந்த 29-ந் தேதி ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சுங்க கட்டணம் கேட்டபோது, அதில் வந்தவர்கள், எம்.எல்.ஏ. அடையாள அட்டையை காண்பித்தனர்.

    காரில் இருந்த 6 பேரிடம் எம்.எல்.ஏ. யார்? என சுங்கச்சாவடி ஊழியர்கள் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காரில் இருந்த திருச்சி சசிகுமார், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டான். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து துப்பாக்கியுடன் இருந்த சசிகுமாரை மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்டகளே பரத்தை பயன்படுத்தி, அவருடன் வந்த மற்ற 5 பேரும் காரில் தப்பிச் சென்றனர்.

    இது குறித்து மாவட்டம் முழுவதும் போலீசார் ஊஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் மர்ம கார் கேட்பாரற்ற நிலையில் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே தப்பிச் சென்றவர்கள் வேறு வாகனத்தில் சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.

    இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே வாகன சோதனையில் ஆட்டோவில் வந்த 5 பேரும் பிடிபட்டனர். அவர்களது பெயர் வேலூர் வசூல் ராஜா, எண்ணூர் தனசேகரன், கிழக்கு குயில்படி ரகுபதி, பெரம்பலூர் கார்த்திகேயன், வியாசர்பாடி ஹரிகிருஷ்ணன் என தெரியவந்தது.

    இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் உள்ளது. அதன் பேரில் சசசிகுமார் உள்பட 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் வந்த காரில் இருந்து 4 துப்பாக்கிகள், 18 தோட்டாக்கள், 14 செல்போன், தங்க மோதிரம், தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் காட்டிய எம்.எல்.ஏ. பாஸ் போலியானது என்பதும் உறுதியானது.

    தொடர்ந்து நடைபெறற விசாரணையில் தப்பி ஓடியது இவர்களுக்கு உதவிய திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கணேசன் மகன் கார்த்திகேயன் (வயது 25) என்பது தெரியவந்தது.

    போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அருண் (திருமங்கலம்) சுந்தரமாணிக்கம் (பெண் குற்ற தடுப்பு பிரிவு) ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய கார்த்திகேயனை தேடி வந்தனர்.

    அவன், திருச்சி பஸ் நிலையப்பகுதியில் இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படையினர் விரைந்து சென்று கார்த்திகேயனை கைது செய்தனர். மதுரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×