search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்

    வாழப்பாடி அருகே இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி 6 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய திருமணமான இளம்பெண் ஒருவர், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நெகிழி குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ் (வயது 25) என்ற இளைஞரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

    இந்த நிலையில், நேற்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், மலைப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினேஷின் மோட்டார் சைக்களில் இருந்த குடும்ப அட்டையை எடுத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் இளம்பெண்ணுடன் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த தினேசை மிரட்டிய அந்த கும்பல், அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அவருடன் வந்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். தினேசை அடிக்காதீர்கள், விட்டு விடுங்கள் என அவர்களிடம் கெஞ்சினார்.

    ஆனால் மீண்டும் தினேசை அடித்து உதைத்து விட்டு அவர்கள், இளம்பெண்ணை வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். அப்போது அந்த பெண், தன்னை விட்டு விடுங்கள், இனிமேல் இங்கு வரமாட்டேன் என கதறினார். ஆனால், அந்த பெண்ணை மாறிமாறி அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இதனால் பதறிப்போன தினேஷ், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூறி பொதுமக்களை அழைத்து வந்து கூச்சலிட்டதால், இளம்பெண்னை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு, அங்கிருந்து 6 பேரும் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனர்.

    பாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீர் மல்க ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது பற்றி உயர் அதிகாரிகளான போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் வாழப்பாடி டி.எஸ்.பி. சூரிய மூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து டி.எஸ்.பி., சூர்யமூர்த்தி, ஏத்தாப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் தலைமையிலான 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நெய்யமலை பகுதி மக்கள் கூறிய தகவல்களை வைத்தும், பாதிக்கப்பட்ட பெண் கூறிய அங்க, அடையாளங்களை வைத்தும், 6 பேர் கும்பலை வாழப்பாடி, ஏத்தாப்பூர், இடையப்பட்டி, தாண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் உளவுப்பிரிவு போலீசார் உதவியுடன் சல்லடைபோட்டு தேடினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த 4 பேர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இவர்கள் இடையப்பட்டி பகுதியை சேர்ந்த அழகேசன்(29), சேதுபதி(23), தாண்டானூர் பகுதியை சேர்ந்த கோகுல்(21), வெங்கடேசன் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவான தாண்டானூர் கலையரசன், இடையப்பட்டி மணிகண்டன் ஆகிய இருவரையும் ஏத்தாப்பூர் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    வனப்பகுதிக்குள் சென்ற இளம்பெண்ணை, 6 இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×