search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிட்
    X
    ஆசிட்

    மதுரையில் ரவுடி மீது ஆசிட் வீசிய 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு

    மதுரையில் ரவுடி மீது ஆசிட் வீசிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பிச்சை மகன் செந்தில்குமார் (வயது 26). இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

    இவனும் மற்றொரு ரவுடியான வினோத் (30) என்பவனும் நேற்று மாலை ஸ்கூட்டரில் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கிச் சென்றனர்.

    கப்பலூர் மேம்பாலம்- சுங்கச்சாவடி இடையே அவர்கள் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    அவர்கள் செந்தில்குமார் வாகனத்தை தாண்டியபோது திடீரென தாங்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து செந்தில்குமார் மீது வீசினர். அவர் அலறித்துடித்து கீழே விழ, அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

    அதற்குள் மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். ஆசிட் வீச்சில் காயம் அடைந்த செந்தில்குமாரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் வினோத் சேர்த்துள்ளார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆசிட் வீசிய சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்த, நகர் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் செந்தில்குமாரை பார்த்துவிட்டு, விசாரணைக்காக வினோத்தை தேடியபோது அவர் மாயமாகி இருந்தார்.

    வினோத் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிட் வீசிவிட்டு தப்பிய 2 பேர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், பெருங்குடியில் கேட்பாரற்ற நிலையில் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதற்கிடையே அது திருட்டு மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது. விருதுநகர் ஆவியூரைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் அன்பரசன் (36) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தான், ஆசிட் வீசிய ஆசாமிகள் ஓட்டி வந்துள்ளனர்.

    அன்பரசன், பெருங்குடி பகுதிக்கு வந்தபோது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வாகனத்தை பறித்துள்ளனர். அதில் சென்று தான் ரவுடி மீது ஆசிட் வீசியுள்ளனர்.

    பின்னர் தப்பிச் செல்லும்போது பெருங்குடியில் மோட்டார் சைக்கிளை விட்டுச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    அவர்கள் யார்? எங்கு சென்றனர்? என போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×