search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தஞ்சையில் சோக சம்பவம் - தந்தை இறந்த துக்கத்தில் மகன் தீக்குளித்து தற்கொலை

    தந்தை இறந்த சோகத்தில் மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    இவரது தந்தை சுப்பிரமணியன் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவர் அதிக பாசம் வைத்திருந்த சரவணனால் தனது தந்தை இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துக்கம் தாளாமல் வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிஅறையில் அமர்ந்து அழுதபடியே இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டைவிட்டு வெளியே வந்த அவர் பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் வாங்கிகொண்டு தஞ்சை கரந்தை அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத சந்தில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

    உடலில் பற்றி எரிந்த தீயுடன் அலறியபடி சாலையில் ஓடிவந்த அவரை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை போர்வையை போர்த்தியும், தண்ணீரை ஊற்றியும் அணைத்தனர்.

    இதில் அவரது உடலில் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே இறந்தார்.

    இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×