search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

    கோவையில் மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 46). சமையல் தொழிலாளி.

    இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புதிய மோட்டார் சைக்கிளை வாங்கினார். சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்ட பாலுசாமி ஈச்சனாரி- செட்டிபாளையம் சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார். அங்கு டீ குடித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மாயமானது. மர்ம நபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அதிரப்பள்ளி அருவி போலீசார் வாகன சோதனையில்போது கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த ஷாஜகான் (22) என்பவர் திருட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் கேரளா போலீசிடம் தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர். இதனையடுத்து கேரளா போலீசார் ஷாஜகான் மற்றும் திருடிச்சென்ற மோட்டார் சைக்கிளை போத்தனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் பறிமுதல் செச்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சமையல் தொழிலாளி பாலுசாமியின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகானை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஷாஜகான் மீது ஏற்கனவே பல வாகன திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும், வேறு இடங்களில் திருடிய மோட்டார் சைக்கிளை கேரளாவில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து ஷாஜகானிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×