search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட பெண் ஊழியரின் உடலை மீட்ட காட்சி
    X
    தற்கொலை செய்து கொண்ட பெண் ஊழியரின் உடலை மீட்ட காட்சி

    பெண் போக்குவரத்து ஊழியர் தற்கொலை - பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்

    ராமநாதபுரத்தில் போக்குவரத்து கழக பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் வீட்டில் சிக்கிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் காட்டூரணியைச் சேர்ந்தவர் நம்புராஜன். இவரது மனைவி ஷோபனா (வயது 41). இவர் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் புறநகர் பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    வழக்கம் போல் நேற்று வேலைக்குச் சென்ற ஷோபனா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த நம்புராஜன் மற்றும் உறவினர்கள் ஷோபனாவை பல்வேறு இடங்களில் தேடினர். பலன் இல்லை.

    எனவே கேணிக்கரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷோபனாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் காட்டூரணியில் புதிதாக தோண்டப்பட்ட குடிநீர் கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக கேணிக்கரை போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டனர். பின்னர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தது மாயமான ஷோபனா என தெரியவந்தது.

    இந்த நிலையில் ஷோபனா வீட்டில் அவர் எழுதி வைத்திருந்த பரபரப்பு கடிதம் சிக்கியது. அதில், தன்னுடன் பணியாற்றும் 3 பெண் ஊழியர்களின் டார்ச்சர் காரணமாகவே தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு காரணமான அவர்கள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிணற்றில் குதித்து தற்கொலை செய்த ஷோபனாவுக்கு ஒரு மகள் உள்ளார்.
    Next Story
    ×