search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பவம் நடந்த வீட்டு முன்பு திரண்ட பொதுமக்கள்
    X
    சம்பவம் நடந்த வீட்டு முன்பு திரண்ட பொதுமக்கள்

    பள்ளிப்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் ராமாயி (வயது 70). இவர் அப்பகுதியில் உறவினருக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டில் 2-வது மாடியில் தனியாக வசித்து வந்தார்.

    இன்று காலை நீண்ட நேரமான பிறகும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. வழக்கமாக ராமாயி அதிகாலையில் எழுந்து விடுவார். இன்று காலை வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் கதவை திறந்து பார்த்தனர். வீட்டின் சமையல் அறையில் ராமாயி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. சண்முகம், பள்ளிப்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து, ராமாயி உடலை பார்வையிட்டனர். அவருடைய தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டு காயங்கள் இருந்தது. அரிவாள் மனையால் மர்மநபர் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அப்போது விசாரணையில், ராமாயி தனியாக வசிப்பதை மர்மநபர் நோட்டமிட்டு இருக்கிறார். அவர் எத்தனை மணிக்கு கதவை பூட்டி விட்டு வெளியே செல்கிறார்?, எப்போது வீட்டுக்கு வருவார்?, அவர் யார்? யாரிடம் பேசுவார்? என்பதையும், அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்கள் இரவு எத்தனை மணி வரை கண்விழித்து இருக்கிறார்கள் என்பதை எல்லாம் மர்மநபர் கவனித்துள்ளார்.

    நேற்று இரவு ராமாயி தனியாக இருந்ததை அறிந்த மர்மநபர் இரவு வீட்டிற்குள் புகுந்து ராமாயியை அரிவாள் மனையால் சரமாரியாக வெட்டி கொலை செய்து இருக்கிறார். பின்னர் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

    பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளியை தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி ராமாயி எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×