search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருப்பூர் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருட்டு

    திருப்பூர் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் திருடிய ரூ.14 லட்சம் பணத்தில் நிலம் வாங்கி குவித்த கொள்ளையர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். ரியல் எஸ்டேட் புரோக்கர். இவருடைய மனைவி சத்தியசுந்தரி (வயது 39).

    இவர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பிரிவில் கணினி உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி காலையில் செந்தில்குமார் வெளியில் சென்று விட்டார். சத்தியசுந்தரியும் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டார்.

    மாலை வேலை முடிந்ததும் வீடு திரும்பிய சத்தியசுந்தரி வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சத்திய சுந்தரி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியசுந்தரி வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தாராபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (29), காங்கயத்தை சேர்ந்த யுவராஜ் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பிடிபட்ட கொள்ளையர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திருடிய பணத்தில் கொள்ளையர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் ரூ.8 லட்சத்துக்கு நிலம் வாங்கி குவித்ததாகவும்,மீதி ரூ.6 லட்சத்தை உல்லாசமாக செலவு செய்ததாகவும் கூறினர். கொள்ளையர்கள் வாங்கிய நிலத்தை மீட்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×