search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கருமத்தம்பட்டியில் விபத்து- இளம்பெண் பலி

    கோவை கருமத்தம்பட்டி அருகே மொபட்டின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள குமார் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி பிரியா (வயது 34). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் ஹாலே பிளாக் கல் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை பிரியா தனது மொபட்டில் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார். மொபட் கருமத்தம்பட்டி நால் ரோடு அருகே சென்ற போது திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து கோவைக்கு வந்து கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மொபட்டின் பின்பக்கத்தில் திடீரென மோதியது. இதில் நிலை குலைந்து பிரியா மொபட்டில் இருந்து கிழே விழுந்தார்.

    கண்இமைக்கும் நேரத்தில் லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவஇடத்திலேயே பிரியா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் இறந்த பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போத்தனூரை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 24). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அரசு ஆஸ்பத்திரி சென்று சிகிச்சைக்கு பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று இவர் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டு நஞ்சுண்டாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விக்னேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். மதுக்கரையை சேர்ந்தவர் பிரவீன் (வயது 27). சம்பவத்தன்று இவர் பாலக்காடு மெயின் ரோடு சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மினி லாரி பிரவீன் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×