search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.
    X
    விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.

    சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    பெரம்பலூர்:

    ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு அதனை கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.

    இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்நகர் பகுதிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வந்துள்ளன. அந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, அலங்கார ஒப்பனைகள் செய்யும் பணியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மயில், அன்னம், சிங்கம், மாடு, மான், தாமரை போன்றவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது, ஐந்துமுக சிங்க விநாயகர், சிவலிங்கத்தில் விநாயகர், கருட வாகனத்தில் விநாயகர், கிருஷ்ணருடன் விநாயகர், சிவன், பார்வதி, முருகன் குடும்பத்துடன் இருப்பது போன்ற விநாயகர், நந்தி விநாயகர், ரெங்கநாதர் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டி, அலங்கார ஒப்பனைகள் செய்யும் பணியில் மும்முரமாக தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அரை அடி முதல் 12 அடி உயரம் வரை பல்வேறு அலங்காரத்தில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளது.

    இதுகுறித்து விநாயகர் சிலைகளை விற்பனை செய்யும் தொழிலாளியான விழுப்புரம் சிந்தாமணி அகரம் பாபு (வயது 39) கூறுகையில், சுற்றுச் சுழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் காகித கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றால் விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது. இவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர்மாசுபாடு ஏற்படாது. இங்கு விற்பனைக்கு உள்ள சிலைகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விழாக்குழுவினர் வாங்கி செல்ல ‘ஆர்டர்‘ கொடுத்துள்ளனர். பெரிய விநாயகர் சிலைகள் ரூ.10 ஆயிரம் முதல் விற்கப்படுகிறது. சிலைகளின் உயரம் மற்றும் கலைநயத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது விநாயகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் சிலைகள் தயாரிக்க தொழிலாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. அப்படி கிடைத்தாலும் தொழிலாளர்களின் கூலி அதிகமாக உள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிலைகளின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும் என்றார்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இதில் குஜராத் மாநிலத்திலிருந்து தொழிலாளர் குடும்பத்தினர் சிலர் தங்கி, இந்த தொழிலை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×