search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    ஒரத்தநாடு அருகே கணவன்- மனைவியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

    ஒரத்தநாடு அருகே கணவன்- மனைவியை தாக்கி 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45), விவசாயி. இவர் தனது தோட்டத்து வீட்டில் மனைவி தமிழ்மணியுடன் (42) வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 3 பேர் கும்பல் உள்ளே நுழைந்தனர். அப்போது சத்தம் கேட்டு விழித்த தமிழ்மணி, 3 பேர் கும்பலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 3 பேரும் சட்டை இல்லாமல் உடல் முழுவதும் எண்ணை தேய்த்து இருந்தனர். மேலும் டவுசர் அணிந்து இருந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் தமிழ்மணி அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றனர். அப்போது அவர் கூச்சல் போட்டு அந்த கும்பலுடன் போராடினார்.

    மனைவியின் சத்தம் கேட்டு ராஜேந்திரன் ஓடி வந்தார். அப்போது ஆத்திரத்தில் இருந்த டவுசர் கொள்ளையர்கள், கணவன்- மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் தமிழ்மணி அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றி பாப்பாநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து டவுசர் கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    ஒரத்தநாடு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே வீடுகளில், கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பூட்டி கிடக்கும் வீடுகள், கடைகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் மர்ம கும்பல் கைவரிசை காட்டி வருகிறது.

    எனவே ஒரத்தநாடு போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளை கும்பலை கைது செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×