search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    டி.என்.பாளையம் அருகே சோளக்காட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்

    டி.என்.பாளையம் அருகே சோளக்காட்டில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டிஎன்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே, டிஎன்.பாளையம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாரஸ்ட்ரோடு அருகேயுள்ள சோளக்காட்டில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பங்களாபுதூர் போலீசாருக்கு நேற்று மாலை 6-மணிக்குமேல் தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ரமேஷ் என்பவரின் சோளக்காட்டில் குத்தகைக்கு எடுத்த நபர் வேலை ஆட்களுடன் சோளப்பயிரை அறுத்து கொண்டிருந்த போது ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

    சிறிது நேரத்தில் இறந்து கிடந்தவரின் சட்டை பையில் செல்போன் அடித்துள்ளது.

    அங்கு வேலை செய்து கொண்டிருந்த நபர் செல்போனை எடுத்து பேசியதில் இறந்தவரின் அடையாளம் தெரியவந்ததையடுத்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இறந்தவரின் உடலை வந்து போலீசார் பார்த்த போது தலையில் அடிபட்ட ரத்த காயமும் முகத்தில் ரத்தம் படிந்தவாறும் வாலிபர் உடல் கிடந்துள்ளது.

    மேலும், இறந்த கிடந்த வாலிபரின் வலது காதுக்கு மேல் தலையில் அடிபட்ட காயமும், வலது கணுக்காலில் வெட்டப்பட்டது போன்று ரத்த காயத்துடன் புண் புரையோடியும் இருந்துள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் கடம்பூர் பெரியசாலட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரகா‌ஷ(வயது 30) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரேவதி, மகன் நிசாந்(வயது 7), மகள் நிசாந்தினி (வயது 6) உள்ளனர்.

    இறந்து கிடந்த பிரகாஷ் ரத்த காயங்களுடன் காணப்பட்டதால் அடித்து கொல்லப்பட்டாரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவர் கரும்பு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளார். சட்டை பையில் செல்போன் கிடைத்துள்ளதால் பிரகா‌ஷ் கடைசியாக யார்-யாரிடம் பேசினார்? போன்ற தகவல்கள் போலீசார் சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே வாலிபர் சாவில் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×