search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் நிலையம்
    X
    ரெயில் நிலையம்

    ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

    ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வரும் அக்டோபர் மாதம் 2-ந்தேதியில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.
    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள ரெயில்கள் மற்றும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களை ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியது. அதன்பேரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நடைமேடைகளில் ஐ.ஆர்.சி.டி.சி. அனுமதியுடன் செயல்படும் கடைகளில் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் பேரில் ரெயில்வே வாரியம் தெற்கு ரெயில்வேக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. இதையடுத்து அந்த சுற்றறிக்கையை அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் தெற்கு ரெயில்வே அனுப்பி உள்ளது.

    அந்த சுற்றறிக்கையில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்களை பொடியாக்கக்கூடிய எந்திரங்கள் வைக்க வேண்டும். ரெயில் நிலையங்களில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. கட்டாயமாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக்

    மேலும், ரெயில் நிலையங்களிலும், நீண்ட தூரம் செல்லும் ரெயில்களிலும் செயல்படும் உணவகங்கள் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், ரெயில் நிலையங்களில் சுலபமாக மறுசுழற்சி செய்யக்கூடிய பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நடைமுறை நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 2-ந்தேதியில் இருந்து அமலுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை ரெயில் நிலையங்களில் பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.
    Next Story
    ×