search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியப்பன்-இந்திரா தம்பதி.
    X
    பழனியப்பன்-இந்திரா தம்பதி.

    கொள்ளையனை குடும்பத்துடன் மடக்கிப்பிடித்த வியாபாரி

    தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய கொள்ளையனை ஒரத்தநாட்டில் வியாபாரி ஒருவர், குடும்பத்துடன் மடக்கிப்பிடித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரத்தநாடு :

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது 60). நவதானிய வியாபாரியான இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். கோவிலில் வழிபாட்டை முடித்து விட்டு பழனியப்பன், அவருடைய மனைவி இந்திரா(47), மகள் சுகன்யா (26), மகன் குமரேசன்(20) ஆகிய 4 பேரும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, வீட்டுக்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் திடீரென வெளியே ஓடிவந்தார்.

    அவர் பழனியப்பனை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் பழனியப்பன், அவருடைய மனைவி இந்திரா, மகன் குமரேசன் ஆகியோர் அந்த நபரை மடக்கிப்பிடித்துக்கொண்டு, திருடன்... திருடன்... என கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை பிடித்தனர். அவரிடம் இருந்த சுத்தியல், கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களையும் பறித்தனர்.

    ராஜேந்திரன்

    பின்னர் பழனியப்பன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கீழே சிதறி கிடந்தது. மேலும் பீரோவையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் பிடிபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், நாகை மாவட்டம் சீர்காழி ரெயிலடி தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(58) என்பதும், கடந்த சில ஆண்டுகளாக அங்கு வசிக்காமல் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் உள்ளிட்ட சில ஊர்களில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

    தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்து கைவரிசை காட்டி உள்ள ராஜேந்திரன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் கூறினர். இவருடன் வேறு யாராவது கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஒரத்தநாடு வந்தார்களா? என்பது குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டுக்கு திருட வந்த கொள்ளையனை வியாபாரி ஒருவர் குடும்பத்தினருடன் சேர்ந்து மடக்கிப்பிடித்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×