search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    சமூக ஆர்வலர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்- வைகோ அறிக்கை

    தமிழக அரசு, தமிழகத்தின் இயற்கை வளத்தையும், நீர்வளத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, முதலைப்பட்டி கிராமத்தில் சுமார் 198.45 ஏக்கர் குளம் மற்றும் நீர் நிலை கொண்ட அரசு நிலம் உள்ளது. இதில் 50 ஏக்கர் தவிர, மற்ற பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி ஆகியோர் வழக்குத் தொடுத்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று 2018 அக்டோபர் 24-ல் உத்தரவிட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    இதனை மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் கவனத்துக்கு வழக்குத் தொடுத்த வீரமலை மற்றும் நல்லதம்பி இருவரும் எடுத்துச் சென்றனர். இதனால் நீர் நிலைகளை ஆக்கிரமித்து இருந்த சமூக விரோதிகள் வீரமலை அவரது மகன் நல்லதம்பி இருவர் மீதும் கடும் கோபம் கொண்டனர்.

    கடந்த ஜூலை 29-ந்தேதி, வீரமலை, நல்லதம்பி இருவரும் ஆறுபேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளனர். அரசுக்குச் சொந்தமான நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைப் பாதுகாக்கப் போராடிய 70 வயது நிரம்பிய இயற்கை ஆர்வலர் வீரமலையும், அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 2016 ஆகஸ்டு முதல் 2019 ஜூலை வரை நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, மது, சாதி வன்மம் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வந்த மனித உரிமை ஆர்வலர்கள் 38 பேர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக எவிடன்ஸ்அமைப்பு தெரிவித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

    மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் புகழூர் விசுவநாதனை நள்ளிரவில் கைது செய்து, முகிலன் வழக்கில் அவரையும் சேர்த்து சிறை வைத்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள் தொடர்ந்து தமிழக அரசின் அடக்குமுறைக்கு உள்ளாவது தொடர்ந்துகொண்டு இருக்கின்றது.

    இதனால், ஊக்கம் பெற்று இருக்கின்ற சமூக விரோதிகளும், மணல் கொள்ளையர்களும் மனித உரிமை ஆர்வலர்களைப் படுகொலை செய்யும் போக்கு சர்வ சாதாரணமாக நடந்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே தமிழக அரசு, தமிழகத்தின் இயற்கை வளத்தையும், நீர்வளத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடி வரும் சமூகப் போராளி திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

    முதலைப்பட்டியில் வீரமலை, நல்லதம்பி ஆகியோரைப் படுகொலை செய்த குற்றவாளிகள் எவராக இருந்தாலும் உடனடியாக கைது செய்து, கூண்டில் நிறுத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழகத்தில் தொடர அனுமதிக்கக் கூடாது

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    Next Story
    ×