search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி ஆறு
    X
    பவானி ஆறு

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம்

    பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு கடந்த 5-ந்தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்புக் கருதி அணையின் 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்றுமுன் தினம் காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 11680 கனஅடி தண்ணீரும், மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு வரத்து எந்த அளவோ அதே அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியாக இருந்தது.

    நேற்று(12.8.19) காலை நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியில் ஒரே சீராக வைத்திருக்க அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியதால் பில்லூர் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இரவு 7மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்தொடங்கியது. அணையின் நீர்மட்ட உயரம் 95 அடி அணையின் 4 மதகுகளில் இருந்து இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பில்லூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 95 அடியாக இருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி 2 ஆயிரம் கன அடி தண்ணீர் 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பவானி ஆற்றில் வெள்ளம் செல்வதால் பில்லூர் அணை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் மேற்பார்வையில் மின்வாரிய அலுவலர்கள் அணைக்கு நீர்வரத்து, அணையின் நீர்மட்டம், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறித்து 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


    Next Story
    ×